Israli Attack on Gaza

"எதிரிகளிடம் மண்டியிட மாட்டோம்''
கடந்த சனிக்கிழமை (27) தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வரும் குரூரத் தாக்குதல்கள் காரணமாக இக்கட்டுரை எழுதப்படும் வரை சிறுவர், பெண்கள், வயோதிபர் என 417 க்கும் மேற்பட்ட அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர். இவர்களுள் 250 பேர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலைகளில் அல்லலுறுகின்றனர்.
1967 ஆம் ஆண்டு ஆறு நாட்கள் இடம் பெற்ற அரபு-இஸ்ரேல் யுத்தத்திற்குப் பின் பலஸ்தீனர்களுக்கு எதிராக நடக்கும் மிக மோசமான அடாவடித்தனமாக இந்தத் தாக்குதலை ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இத் தாக்குதலில் ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பகுதியின் பொலிஸ் நிலையம், பள்ளிவாசல், பல்கலைக்கழகம், வைத்தியசாலை உட்பட ஹமாஸின் கட்டடங்கள், குடியிருப்புகள் என காஸாவின் உட்கட்டுமானம் சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றது.
இதுவரை ஹமாஸின் ரொக்கட் தளம் உட்பட 35 இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. வியாழனன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸின் அதிர் உயர் தலைவர்களுள் ஒருவரான ஷேய்க் நிஸார் ரய்யானும் 1-16 வயதுக்கிடைப்பட்ட அவரது 11 பிள்ளைகளுடன் 4 மனைவியருமாக ஒரே குடும்பத்தில் 15 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ரய்யானின் குடும்பம் இருந்த கட்டடத்தைவிட்டு வெளியேறுமாறு தாக்குதல் நடத்துவதற்கு முன்னைய நாள் தொலைபேசியில் அறிவிக்கப்பட்டதாகவும் ஹமாஸின் மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் காஸாவின் வடமேல் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் வீசிவிட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
"பலஸ்தீன மக்களே! காஸா ப் பகுதி மக்களே! நீங்கள் கவலைப்பட வேண்டாம். உயிர்களைப் பறிகொடுத்ததற்காய் துன்பப்பட வேண்டாம். நிச்சயமாக! அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான். நாம் வெற்றி பெறுவோம். வெற்றி மிகவும் அண்மித்து விட்டது. காஸாவிலிருக்கும் ஒவ்வொரு சிறுவனும் ஒவ்வொரு இளைஞனும் நாளை வீறுகொண்டெழுந்து யூத ஆயுதங்களை, விமானங்களை தகர்த்தெறிந்து வெற்றி கொள்வர்'' எனும் நற்செய்தியைக் கூறி காஸா மக்களை ஆறுதல்படுத்தி பலஸ்தீனர்களுக்கு வெற்றி அண்மித்துவிட்டதாக பலஸ்தீன் பிரதமர் இஸ்மாஈல் ஹனீயா தெரிவிக்கிறார்.
அத்தோடு, ""காஸாவில் நிகழ்ந்த கொலைவெறியாட்டமே உங்களது அரசியல் வாழ்வின் முடிவாகும். இஸ்ரேலியப் படைகளே! நீங்கள் காஸாவுக்குள் நுழைந்தால் அழிவு நிச்சயமாக காத்திருக்கிறது. அல்லாஹ் எம்முடன் இருப்பதனாலும் இஸ்ரேலை எதிர்த்து பலமான தாக்குதல் நடத்த நாம் தயாராயிருப்பதனாலும் எமக்கு வெற்றி நிச்சயம்'' என ஹமாஸ் தலைவர் ஹாலித் மிஷ்அல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தை குறித்து பேசுகையில், "இத்தாக்குதலை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும். அனைத்து காஸா எல்லைகளையும் உடனே திறந்து விட வேண்டும். இஸ்ரேலுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு அரபுலகம் உட்பட சர்வதேசமும் விரும்புவதாகவும் எம்மை அதற்கு இணங்கும்படி வலியுறுத்தியும் வருகின்றன. ஆனால், ஹமாஸின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது; ஹமாஸ் ஒருபோதும் எதிரிகளிடத்தில் மண்டியிடாது'' என்றும் ஹாலித் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஆட்சிக்கு வேட்டு வைக்கப்போகிறது ஹமாஸ் என்ற அச்சத்தின் காரணமாக அப்பாஸின் பின்னணியிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. ஏனெனில், அப்பாஸின் ஆட்சிக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தப்போவதாகவும் பலஸ்தீன் அரசாங்கத்துக்கு புதியதொரு அரசியல் நகலை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் ஹமாஸ் அண்மையில் தெரிவித்திருந்தது.
காஸா மீதான இத்தாக்குதலுக்கு வழமைபோல் அமெரிக்கா-பிரிட்டன்-ஐரோப்பிய யூனியன் முதலான வல்லரசுகள் பின்னணிச் சக்திகளாக இருப்பது மட்டுமல்ல, எகிப்து-சஊதி போன்ற அரபு நாடுகள் இத்தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றன என்பதை அவற்றின் மெளன நாடகம் காட்டுகிறது. .
இத்தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன் இஸ்ரேலிய வெளிநாட்டமைச்சர் வீஷ்குஷ்ஸ்ரீஷ் ஸிஷ்ஸஐஷ் கெய்ரோவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டு எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கை சந்தித்தமையும் தாக்குதலுக்கு பின்னர் ஜனாதிபதி புஷ் ஹுஸ்னியை தொடர்பு கொண்டு இத்தாக்குதல் குறித்த எகிப்தின் மெளனத்துக்கு நன்றிசெலுத்தியமையும் எகிப்திய அரசாங்கம் அப்பாவிப் பலஸ்தீனர்களின் படுகொலைகளுக்கு எந்தளவு ஆதரவு வழங்குகிறது என்பதைப் புலப்படுத்துகிறது.
ஆனால், அம்மான், தெஹ்ரான், லெபனான் போன்ற நகரங்களில் இத்தாக்குதலை எதிர்த்து, பலத்த கோமெழுப்பி பேரணிகளை நடத்தினர். கடந்த வெள்ளியன்று சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தோனே´யர்கள் அந்நாட்டு அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் பாரியதொரு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
28ம் திகதியன்று ஜோர்தானிய பாராளுமன்றத்தில், இஸ்ரேலிய-ஜோர்தானிய சமாதான உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு கோரி 30 எம்பிக்கள் கைச்சாத்திட்டனர். இதனைத் தொடர்ந்து பலஸ்தீன பூர்வீக முஸ்லிம் எம்பி கலீல் அதிய்யாவும் ஜோர்தானிய கிறிஸ்தவ எம்.பி. பஸம் ஹத்ததின்வும் இணைந்து, இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்த்து இஸ்ரேலியக் கொடியை பாராளுமன்றில் எரித்தனர்.
அவ்வாறே பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளிலுள்ள பிரதான நகரங்களிலும் முஸ்லிம்கள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, ""காஸா மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குல் நிச்சயமாக ஒரு இனஒழிப்பு என்பதை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரேலுடனான உறவை அரபுத் தலைமைகள் உடனே முறித்துக் கொள்ள வேண்டும். ரபா கடவையை திறக்க எகிப்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கலாநிதி யூஸுஃப் அல்கர்ளாவி தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும்; அது பயங்கரவாதத்தை கைவிடும்வரை அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்றும் புஷ்-கிளின்டன்-புஷ் வரிசையில் நின்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாழ்வே போராட்டம்; போராட்டமே வாழ்வு என வாழும் பலஸ்தீனர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தமது போராட்ட வாழ்வில் அனுபவித்த ஒரு துயரத்தின் பக்கமாகவே இதனைக் கொள்வர். அவர்கள் இத்தகைய பல கொடூர அனுபவங்களைத் தாண்டியே தமது எழுச்சிப் போராட்டமான "இன்திபாழா'வை ஹமாஸின் தலைமையில் அணிதிரண்டு முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வத்தனை இழப்புகள், ஒடுக்குமுறைகள், காட்டிக் கொடுப்புகள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில்தான் "இன்திபாழா' பலஸ்தீனை தலைநிமிர வைத்திருக்கிறது.
மூன்றாவது இன்திபாழாவுக்கான ஹமாஸின் அழைப்பு இதனை உண்மைப்படுத்துகிறது.






